Thursday, December 19, 2013

விக்னேஸ்வரன் முதல்–அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய முடிவு செய்துள்ளார்.

இலங்கையில் விடுதலைப் புலிகளுடனான இறுதிக்கட்ட போர் முடிவுற்ற நிலையில் இந்த ஆண்டு வடக்கு மாகாணத்தில் தேர்தல் நடத்தப்பட்டது.
இதில் தமிழ் கட்சி கூட்டணி வெற்றி பெற்று மெஜாரிட்டி பலத்துடன் ஆட்சியைப் பிடித்தது, அக்கட்சியின் முன்னணி தலைவரான விக்னேஸ்வரன் முதல்–மந்திரியாக பதவி ஏற்றார்.
வடக்கு மாகாணத்தின் கவர்னராக ராணுவ மேஜர் ஜெனரல் ஜி.ஏ. சந்திரஸ்ரீ உள்ளார். அவர் வடக்கு மாகாண நிர்வாகத்தில் நேரடியாக தலையிட்டு வருகிறார். இதனால் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட விக்னேஸ்வரன் பணியாற்ற முடியாதநிலை ஏற்பட்டுள்ளது.
இதனால் கவர்னருக்கும் முதல்–அமைச்சர் விக்னேஸ்வரனுக்கும் மோதல் ஏற்பட்டது. இதில் அதிருப்தி அடைந்த விக்னேஸ்வரன் முதல்–அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய முடிவு செய்துள்ளார்.
இது குறித்து ஜனநாயக மக்கள் முன்னணி கட்சியின் தலைவர் மனோ கணேசன் நிருபர்களிடம் கூறுகையில், வடக்கு மாகாண முதல்–அமைச்சருக்கும் கவர்னருக்கும் இடையே ஏற்பட்டுள்ள பிரச்சினை தொடர்பாக இலங்கை அதிபர் ராஜபக்சேவிடம் டெலிபோனில் விளக்கி கூறினேன். இது தொடர்பாக விக்னேஸ்வரனுடன் சந்தித்து ஆலோசனை நடத்த உள்ளதாகவும், இதற்காக யாழ்ப்பாணம் வரவும் தயாராக இருப்பதாகவும் ராஜபக்சே தன்னிடம் தெரிவித்தார்.
போருக்குப் பிறகு முதல் முறையாக தமிழர் பகுதியில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள முதல்–அமைச்சர் ராஜினாமா செய்தால் ஜெனிவாவில் வருகிற மார்ச் மாதம் நடைபெறும் ஐ.நா. மனித உரிமை கூட்டத்தில் இலங்கை அரசுக்கு நெருக்கடி ஏற்படும். எனவே தான் விக்னேஸ்வரனை சமாதானப்படுத்தும் முயற்சிக்கு ராஜபக்சே முன் வந்துள்ளார்.

No comments:

Post a Comment